
கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக்கொண்ட 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான “எவர்கிறீன்” என்ற சரக்கு கப்பல் மீட்பு பணிகள் நிறைவடைந்து இன்று தனது பயணத்தை தொடர்ந்துள்ளது.
கப்பலின் இடது பக்கத்தில் இருக்கும் மணல் மற்றும் சகதியை நீக்கி, கப்பலை மீண்டும் நீரில் மிதக்க வைக்கும் தொடர் முயற்சிகளின் காரணமாக, 18 மீட்டர் ஆழத்திற்கு 27,000 கன மீட்டர் மணல் தோண்டப்பட்டு இன்று கப்பல் மிதக்கத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலின் முன்புறம் சேதமடைந்துள்ளது. எனினும், கப்பல் பயணம் செய்யும் அளவிற்கு பாதுகாப்பாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது கப்பல் மிதக்க தொடங்கியிருப்பதால் கண்டெய்னர்களை இறக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மெதுவாக கப்பலை நகர்த்தி கால்வாயின் மையப்பகுதிக்கு கொண்டு வந்ததும் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த பாரிய சரக்கு கப்பல் மணல், மற்றும் சகதியில் சிக்கியதால் கப்பலை நகர்த்த முடியாமல் போயிருந்தது. இதனால் அந்த வழித்தடத்தில், கடந்த 6 நாட்கலளாக கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு 450-க்கும் அதிகமான கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.