
மியான்மரில் – இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை ஒடுக்குவதற்கு இராணுவம் போராட்டக்காரர்களை கண்மூடித்தனமாக கொன்று குவித்து வருகிறது.
ஆட்சி கவிழ்ப்பு நடந்த பிப்ரவரி 1 முதல் இப்போது வரை 260-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் சிவில் உரிமைகள் குழு கூறுகிறது.
பகலில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தியும், அடித்தும் விரட்டியடிக்கும் இராணுவம் இரவு நேரத்தில் அவர்களை வீடு புகுந்து கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இரவும், மண்டலே நகரில் உள்ள வீடுகளுக்குள் ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து போராட்டக்காரர்களை கைது செய்துள்ளனர்.
இதந்போது, மவுங் கோ ஹாஷின் பா என்பவரை கைது செய்ய ராணுவ வீரர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்த சமயம் அவரது 7வயது மகள் கின் மோ சிட் இராணுவ வீரர்களைக் கண்டு பயந்து தனது தந்தையை நோக்கி ஓடியுள்ளார். அப்போது இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுமி கின் மோ சிட்டின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துள்ளார்.
இவ்வாறு 7 வயது சிறுமி இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது குறித்து இராணுவம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
அதேசமயம் கடந்த மாத முற்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட 628 பேரை நேற்று இராணுவம் விடுதலை செய்துள்ளமையும், இவர்களில் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.