Home தாயக செய்திகள் தீச்சட்டி போராட்டம் – தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி கதறி அழுத உறவினர்:

தீச்சட்டி போராட்டம் – தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி கதறி அழுத உறவினர்:

178
0

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் தீச்சட்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பமானது.

இதன்போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீச்சட்டிகளை ஏந்தியவாறு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றல் வரை ஏ9 வீதி ஊடாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டத்தின் 4 ஆவது ஆண்டு நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டு ஆரம்பித்துள்ள இன்றைய நாளில் குறித போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைக் கேட்டு தொடர்ந்து போராடி வருகின்ற தாய்மார்களுக்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில், உள்நாட்டில் நீதியை இனியும் எதிர்பார்க்க முடியாது எனவும் சர்வதேசமாவது நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இம்முறை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில், தங்களது விவகாரம் தொடர்பாக உரிய தீர்வு கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் வகையில் தீச்சட்டி ஏந்தி இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, தாய்மார்கள் பலர் போராட்ட இடத்திலேயே தனது குழந்தைகளை இழந்து படும்வேதனையைக் கூறி, கதறி அழுத காட்சிகள் பார்ப்போர் மனதை உலுக்கியதுடன் சில தாய்மார் போராட்ட இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர்.