
யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 2300 கொரோனா தடுப்பூசி மருந்துகள் இன்று வந்தடைந்துள்ளன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை தொடக்கம் மூன்று நாள்களுக்கு முன்னெடுக்கப்படும் என்று பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலை மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை(30) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷெல்ட் (AstraZeneca COVISHELD) கொரோனா தடுப்பூசியின் 5 இலட்சம் டோஸ்கள் இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. அந்த தடுப்பூசி முதல் கட்டமாக சுகாதாரத் துறையினர், பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு ஏற்றும் பணி இன்று(29) மேல் மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.