
மாநகரசபை யாழ் யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் சமர்ப்பித்த வரவு செலவு திட்டம் வெற்றியடைந்துள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 15 பேர் நடுநிலை வகித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையிலிருந்த யாழ் மாநகரசபையை வி.மணிவண்ணன் தரப்பினர் கைப்பற்றிய பின்னர் சமர்ப்பித்த முதலாவது வரவு செலவு திட்டமாக இது இருந்தது. வரவுசெலவு திட்டத்தை சமர்ப்பிக்க முன்னர் உரையாற்றிய முதல்வர் மணிவண்ணன் முன்னாள் முதல்வர் சமர்ப்பித்த வரவுசெலவு திட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு இந்த வரவுசெலவு திட்டத்தை சமர்ப்பிப்பதாகவும் பெரியளவில் மாற்றங்கள் இல்லை என்றும் கூறினார். இந்த வரவுசெலவு திட்டம் தோற்கடிக்கப்படுமானால், சபை கலைக்கப்பட்டு உள்ளூராட்சிகள் ஆணையாளரின் நேரடி அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பப்டும் என்றும் அதனால் வரவுசெலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்து எவரும் தமிழ் தேசியத்துக்கு துரோகம் செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக மக்களிற்கு தெரியப்படுத்தப்படவில்லை என்பது உள்ளிட்ட பல காரணங்களை குறிப்பிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பன எதிர்ப்பு தெரிவித்தன.
இதன்போது, ஈ.பி.டி.பி மணிவண்ணனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.
“நாம்“ சட்டத்தை வளைப்போம் என ஈ.பி.டி.பி தரப்பினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாநகரசபையில் மொத்தமாக 45 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் . அதில்
கூட்டமைப்பு -16, முன்னணி (மணிவண்ணன்) -10, ஈபிடிபி -10, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 3, ஐக்கிய தேசியக் கட்சி -3, சிறிலங்கா சுதந்திரக் கட்சி -2, தமிழர் விடுதலைக் கூட்டணி -1 என்கிற அடிப்படியில் உறுப்புரிமை கொண்டுள்ளார்கள்.
இன்றைய வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பெரும்பாலோனோர் நடுநிலை வகித்தனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 3 உறுப்பினர்கள் எதிராகவும் 10 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர்.