
இந்திய விவசாயிகள் முன்னெடுத்துவரும் புதிய விவசாய சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம், மலையகம் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் போராட்டங்கள் இன்று (26/01) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,
‘இந்திய மத்திய அரசே உணவளிக்கும் உழவனின் உயிரோடு விளையாடாதே. உலகமே எதிர்த்து நிற்கும் இனி உன்னை, விவசாய உற்பத்திகளை விவசாயிகளே தீர்மானிக்க வேண்டும் காப்ரேட் நிறுவனங்கள் அல்ல. இந்திய மத்திய அரசே முடிவு செய்’ என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டத்தில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்பு சார்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
இதே போன்று மலையகம் நுவரெலியா – ஹட்டன், மல்லியப்பு சந்தியில் மலையக சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று (26/01) போராட்டத்தில் ஈடுபட்டன.
மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் மற்றும் மொன்லார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள், இந்திய விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இந்திய விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை அந்நாட்டு அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனவும் சிறு விவசாயிகளின் உரிமைகளையும் சலுகைகளையும் நசுக்குவதில் இருந்து அவர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி 60 நாட்கள் நடைபெறும் தொடர் போராட்டத்தில் இதுவரை 66 விவசாயிகள் உயிரிழந்துள்ளதற்கு இதன்போது அனுதாபம் தெரிவிக்கப்பட்டதுடன், இந்திய மத்திய அரசுக்கு கண்டனமும் வெளியிடப்பட்டது.
இதேவேளை இந்திய விவசாயிகள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திருகோணமலையிலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (26/01) முன்னெடுக்கப்பட்டது.
இந்திய இலங்கை ஒத்துழைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் திருகோணமலை பொது பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்திய விவசாயிகள் வீதிக்கு இறங்கி போராடுவதற்கு முக்கிய காரணமாக இருந்த அதானி எனும் குறித்த முதலீட்டாளர், தற்போது இலங்கையிலும் சில முதலீடுகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை குறித்த நபருக்கு விற்க இந்த அரசு தீர்மானித்திருப்பதை வன்மையாக கண்டிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.