
தாயார் திட்டியதால் மன விரக்தியில் தவறான முடிவு எடுத்து விஷம் அருந்திய இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த குகதாஸ் தினேஷ் (வயது-18) என்ற இளைஞனே இவ்வாறு விஷம் அருந்திய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு 4 வாரங்களின் பின் இன்று (08/09) உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;
கோப்பாய் மத்திப் பகுதியில் வசித்து வரும் குறித்த இளைஞன் கடந்த 12ம் திகதி (12/08) மாவா போதைப் பொருள் வைத்திருந்தார் என கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் பிணையில் சென்றுள்ளார்.
இந்நிலையில் இளைஞன் தொடர்ச்சியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால் தாயார் திட்டினார் என்றும், இதனால் விரக்தியடைந்த குறித்த இளைஞன் வீட்டை விட்டு மறுநாள் 13ம் திகதி வெளியேறினார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறிய இளைஞன் வீட்டுக்கு அருகில் உள்ள வாழைத்தோட்டத்தில் வைத்து விஷம் அருந்தியுள்ளார். உடனடியாக கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (08/09) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.