
யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு “அனைவருக்கும் வீடு என்ற செயற்றிட்டத்தின் கீழ் ” வீடமைப்புக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ். மாவட்டச் செயலகத்தில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, 113 குடும்பங்களுக்குமான முதல் தவணை கொடுப்பனவுகளை அங்கஜன் இராமநாதன் வழங்கி வைத்தார்.அத்துடன் 113 குடும்பங்களுக்கு 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடுளை நிர்மாணிப்பதற்கான முதலாம் தவணைக் கொடுப்பனவு பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ். அரச அதிபரும் ஒருங்கிணைப்பு சபையின் செயலாளருமான கணபதிபிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.நிக்கொலஸ்பிள்ளை, வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ரவீந்திரன், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள், அரச அலுவலர்கள், பயனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.