
நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில சிந்தனைகளை கொள்ள வேண்டும் என்பதிலே மக்கள் தங்களுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்கள் என்பதோடு இனி வரும் காலங்களில் துரிதமாக அபிவிருத்தி சம்பந்தமாக சிந்திக்க வேண்டும் என்பதை தமது வாக்குகள் மூலம் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (08/08) காலை 10.30 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
தமிழ் தரப்பில் யாழ்ப்பாணத்தை பொருத்த மட்டில் எல்லா கட்சிகளும் கூடுதலாக தமிழர் தரப்பான கட்சிகளுக்கு மக்கள் ஆணை தந்துள்ளார்கள். அதை ஏற்று பாராளுமன்றத்திற்கு உள்ளே நாங்கள் எல்லோரும் ஒன்றாக செயற்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கு நிச்சயமாக நாங்கள் முயற்சி செய்வோம்.
மக்கள் மத்தியில் எங்களுடைய செயற்பாடுகள் இனி வரும் காலங்களில் துரிதமாக அபிவிருத்தி சம்பந்தமாக சிந்திக்க வேண்டும் என்பது இன்று நாங்கள் உணர்ந்த விடயம்.
மக்களுடைய விருப்பம் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்படுவதே. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் ஒரு பக்கம் வைத்து விட்டு எங்களுடைய மக்கள் சார்ந்த விடயங்களில் நாங்கள் ஒன்றாக செயற்படுவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ள இருக்கின்றோம்.
அந்த வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடும், முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களோடும் நாங்கள் பேச இருக்கின்றோம். என்றார்.