
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனும் முடிவானது முற்றுமுழுவதுமாக என்னுடைய முடிவேயாகும். இம்முடிவை சில தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையிலேயே நான் எடுத்துள்ளேன். என மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்ட நிபுணருமான அம்பிகா சற்குணநாதன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனும் முடிவானது முற்றுமுழுவதுமாக என்னுடைய முடிவேயாகும். இம்முடிவை சில தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையிலேயே நான் எடுத்துள்ளேன்.
சில ஊடக நிறுவனங்களும் ஊடக தர்மத்தின் அடிப்படை கோட்பாடுகளை புறக்கணித்து நேர்மையான விதத்தில் சரியான செய்திகளை வெளியிடும் பணியில் இருந்து விலகி பொய்யான மற்றும் பிழையான தகவல்களை பரப்புகின்றமை சமூகப் பொறுப்பற்ற செயலாகும்.
அரசியலில் மற்றும் பொது விடயங்களில் ஈடுபட எண்ணம் கொள்ளும் அல்லது அவ்வாறு எண்ணுவதாக நம்பப்படும் பெண்களுக்கு எதிராக பொய்யான பிரசாரங்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது கவலைக்கிடமான விடயமாகும்.
ஆண் ஆதிக்கம் செரிந்த இந்தத் துறையில் பெண்களின் செயல்திறன் மிக்க மற்றும் சமமான பங்குபற்றலை தடுக்கும் வண்ணமானதாகவே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்தருணத்தில் பெண்களின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவினை வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். மேலும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் பொதுச் சேவைகளில் எனது பணி இடைவிடாது தொடரும் என உறுதியளிக்கின்றேன்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.