
அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் போலி நாணயத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவரை நேற்று (24/12) கைது செய்ததுடன் அவரிடம் இருந்து அச்சு பொறி மற்றும் போலி நாணயத்தாள் தயாரிக்கும் தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்பாறை தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
கல்முனை தேசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று பகல் 12 மணியளவில் தேசிய புலனாய்வு பிரிவினர் பொறிவைத்து குறித்த நபரை ஒலுவில் சந்தைப் பகுதியில் வைத்து 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள் ஒன்றுடன் கைது செய்தனர்.
இதனையடுத்து ஒலுவில் 2 ம் பிரிவிலுள்ள அவரது வீட்டை சோதனை செய்தபோது அங்கு நாணயத்தாள் அச்சிடும் தாள்கள் மற்றும் பிரிண்டர் ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை அம்பாறை தலைமையக பொலிசாரிடம் தேசிய புலனாய்வு பிரிவினர் ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.