
கோட்டாபய ராஜபக்சவிற்கு எந்த ஒரு தமிழரும் வாக்களிக்க கூடாது என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடைசிக்கட்ட யுத்தத்தில் நிராயுதபாணியாக சரணடைய சென்றவர்களை கொல்ல உத்தரவிட்டவர் அவராகத்தான் இருக்க வேண்டும். வெள்ளைவான் கடத்தல்கள் உள்ளிட்ட பல கொடுமைகளை அவர் செய்தார். கோட்டாபயவை வேட்பாளராக்கும் மஹிந்தராஜபக்சவின் முடிவு தவறானது. சுயமாக சிந்திக்கும் தமிழர்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்;
தேர்தலில் யாராவது ஒரு சிங்களவர்தான் வெல்லப்போகிறார். தமிழர் ஒருவர் போட்டியிடுவதால் எந்த பலனுமில்லை. ஆனால் மூன்றாவது நபருக்கு வாக்களிப்பதால் தமிழர்களின் மனநிலையை உலகிற்கு புரிய வைக்கலாம். சுதந்திரக்கட்சியில் போட்டியிட என்னிடம் யாரும் கேட்கவில்லை.
சில காலத்தின் முன்னர் தயாசிறி ஜயசேகர விக்னேஸ்வரன் விரும்பினால் சுதந்திரக்கட்சியில் போட்டியிடலாம் என கூறியிருந்தார். அதை வைத்து யாரோ கிளப்பிய வதந்தியே விக்னேஸ்வரன் சுதந்திரக்கட்சியில் போட்டியிட போகிறார் என்பதாகு. இது முற்றிலும் தவறானது என்பதோடு, நான் சிங்களத்தின் பக்கம் நிற்பது போன்று காட்டி என்னை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அப்புறப்படுத்தவும், ஆதரவைக் குறைக்கவும் சில அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் முயல்வதுபோல் தெரிகிறது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.