
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தனி நாடான தமிழீழத்தை பெறும் நோக்குடன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால் பயங்கரவாதத்தை விஞ்சிய படுமோசமான தீவிரவாத நடவடிக்கைகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சர்வதேச செய்தி சேவையொன்றின் கொழும்பு செய்தியாளருக்கு நேற்றைய தினம் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஐ.எஸ்.ஐ.எஸ். கொள்கை இல்லாமல் படுமோசமான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து அவர்கள் நடத்திய தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலர் பலியாக்கப்பட்டார்கள்.
அதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தமது குடும்பங்களுடன் குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்துள்ளனர். 15 பேர் இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளதுடன், அதில் 6 பச்சிளம் பாலகர்களும் அடங்குகிறார்கள்.
இப்படி ஈவிரக்கமின்றி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். இவர்களை உயிருடன் விடக்கூடாது. அவர்களை அரசு முற்றாக அழித்தொழிக்க வேண்டும். அப்போதுதான் மூவின மக்களும் இந்த நாட்டில் நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ முடியும் என குறிப்பிட்டுள்ளார்.