
முகமாலையில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில், கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களான இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை இடம்பெற்றுவருகிறது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;
முகமாலை பகுதியில் இராணுவ ஆக்கிரமிப்பு பகுதியில் இன்று காலை கண்ணிவெடி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது ஏதிர்பாராத விதமாக புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி ஒன்று வெடித்து சிதறியுள்ளது.
இதில் பரந்தனை சேர்ந்த 6 வயதுப் பிள்ளையின் தாயாரான குணேந்திரன் ரேணுகா (வயது-25) என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். இவருக்கு அருகில் நின்ற இன்னொரு பெண் உத்தியோகத்தரான மேகலதா என்பவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களுக்கு முகம் மற்றும் நெஞ்சு பகுதிகளை பாதுகாக்கவே கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. கைகளை பாதுகாக்க போதுமான உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.