
சித்திரவதை செய்வதற்கான உத்தரவுகள் அனைத்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவினால், வழங்கப்பட்டது என்று உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
கோத்தபாயவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தமையை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு லண்டனில் இடம்பெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கும்போதே யஸ்மின் சூக்கா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் வழக்கைத் தாக்கல் செய்த ரோய் சமாதானம் மற்றும் பிரபல சட்டத்தரணி ஸ்கொட் கிள்மரே ஆகியோர் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த சூகா,
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய மீது தற்போது நாம் வழக்கு தொடர்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாக காணப்படுகின்றது. சித்திரவதை செய்வதற்கான உத்தரவு மற்றும் கட்டளைகள் அனைத்தும் கோத்தபாய ராஜபக்சவால் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாடுகளுக்கு கோத்தபாய சட்டபூர்வமாக பொறுப்புக் கொண்டவர்.பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டை மையமாகக் கொண்டிருந்ததாக பல ஆண்டுகளாக கோத்தபாய தனது பகிரங்க அறிக்கைகளில் தெளிவுபடுத்தியுள்ளார்.இந்தச் சம்பவங்கள் ஐ.நா. சபையால் ஆவணப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டதுடன் இலங்கை அரசு இந்தக் குற்றச்சாட்டுக்களை மீண்டும் மீண்டும் எதிர்கொண்டது.
பாதுகாப்புச் செயலர் என்ற ரீதியில் இந்த முறைகேடுகள் நடைபெற்றதா அல்லது சரியான முறையிலேயே செயற்பட்டார்களா என்று நன்கு அறிந்திருந்தார். ஆனால் அவர் குற்றவாளிகளை விசாரணை செய்ய அல்லது தண்டிக்க சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை. முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவில் இருக்கும் தருணத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளது என்றார்.