முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தை மட்டுமே நிறைவேற்றியது. ஆனால் அதற்காக எவ்வித நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொண்டிருக்கவில்லையென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக தற்போதைய அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
அரசியலமைப்பின் 43ஆவது சரத்தின் கீழ் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த தீர்மானம் எடுத்ததாகவும் அனைத்து அரச ஊழியர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து சம்பள அதிகரிப்பை வழங்க தீர்மானித்தாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரது கருத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு பதிலளித்துள்ளார்.
“ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தால் அவ்வாறான நிதி ஒதுக்கீடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. நீங்கள் தோல்விடைந்தால் தயவு செய்து வீட்டில் இருங்கள். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படும். இந்த நாட்டிற்கான எங்கள் நோக்கம் நிறைவேறும் வரை தேசிய மக்கள் சக்தியின் முயற்சிகள் தொடரும்” என அவர் மேலும் தெரிவித்தார்.