சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் சம்மி குமாரரத்ன கைது:

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், முக்கிய சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நேற்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் இந்த மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010 ஜனவரி 24 அன்று கடத்தப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, சட்டமா அதிபர், கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற விசாரணையில் ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்ன உட்பட பத்து பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளார். தற்போது அவர்களுக்கான விசாரணை நடந்து வருகிறது. 

இந்தநிலையில்,நேற்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் எக்னெலிகொட வழக்கின் முக்கிய சாட்சியான சுரேஸ் குமாரை ஓய்வுபெற்ற பிரிகேடியர் குமாரரத்ன பலமுறை மிரட்டியதாக, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அதிகார சபையின் விசாரணை அதிகாரி முறையிட்டார். 

ஓய்வுபெற்ற பிரிகேடியரின் தனிப்பட்ட தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பலமுறை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக அவர் மன்றில் முறையிட்டார்.

அத்துடன் 2025 ஜூன் 6ஆம் திகதியன்று, முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரால் அதே தொலைபேசி எண்ணிலிருந்து சாட்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. 

இந்தநிலையில் சாட்சிகளை அச்சுறுத்தப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் ஆராயப்பட்டு, சரிபார்க்கப்பட்டுள்ளதை விசாரணைப் பிரிவின் அதிகாரி நீதிமன்றத்துக்கு உறுதிப்படுத்தினார்.

இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்னவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அத்துடன், நடந்து வரும் விசாரணைக்காக எதிர்வரும் 13 ஆம் திகதியன்று, நிரந்தர மேல் நீதிமன்ற விசாரணையில் அவரை முன்னிலைப்படுத்துமாறும் திருகோணமலை நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *