கட்சி ஒன்றின் சின்னத்திற்கும் இலக்கம் இரண்டிற்கும் புள்ளடி இடப்பட்டிருந்த 32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்களை கைப்பற்றிய பொலிஸ்!

சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட 32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்களை அரசியல் கட்சி ஒன்றின் பணிமனைக்கு வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசீம் வீதி பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கட்சி ஒன்றின் பணிமனைக்கு சட்டவிரோத மாதிரி வாக்குச்சீட்டுக்கள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினை அடுத்துக் குறித்த பணிமனைக்கு அருகில் தேடுதல் மேற்கொண்ட நிலையில் பொதி செய்யப்பட்ட சுமார் 32 ஆயிரம் வாக்குச் சீட்டுக்களுடன் இரு சந்தேக நபர்களை நேற்று வியாழக்கிழமை (7) மாலை கைது செய்திருந்தனர்.

மேலும் இவ்வாறு மீட்கப்பட்ட மாதிரி வாக்குச் சீட்டில் கட்சி ஒன்றின் சின்னத்திற்கும் இலக்கம் இரண்டிற்கும் புள்ளடி இடப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.  

தற்போது கைதுசெய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன்  மீட்கப்பட்ட சட்டவிரோதமான வாக்குச்சீட்டுக்கள் யாவும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்க  கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸாரும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *